திருப்பரங்குன்றம் வழக்கில், அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் கட்டப்படிருந்த கொடியை அகற்றக்கோரி சிவலிங்கம் என்பவர் தலைமையில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறி திருப்பரங்குன்றம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தங்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை FIR ரத்து செய்ய கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி விக்டோரிய கவுரி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் யாரையாவது குறிப்பிட்ட திசையில் செல்லவிடாமல் தடுத்தார் என்பதற்கான தெளிவான குற்றச்சாட்டுகள் இல்லை. போக்குவரத்துக்கு இடையூறு என்ற குற்றச்சாட்டு இதற்கு போதுமானதல்ல. வெறும் முழக்கங்களை எழுப்புவது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பொதுத் தொல்லையாகது.
பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியாக கூடும் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள். அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்கள் சில நேரங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், அவை சட்டமீறல் ஆகாது.
ஜனநாயக ரீதியிலான கருத்து வெளிப்பாடுகளை ஒடுக்க கிரிமினல் சட்டங்களை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது எனக்கூறி மனுதாரர் சிவலிங்கம் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நாளை விசாரணை
