இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள சிறப்பு கட்டண மற்றும் விஐபி தரிசன முறையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத்தின் வடதமிழ்நாடு பிரிவு தலைவர் சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனுவில், கோயில்களில் பக்தர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கின் போது, “கடவுளின் முன் அனைவரும் சமம் என்று கூறப்படும் நிலையில், விஐபி தரிசனம் என்ற நடைமுறை ஏன் இருக்க வேண்டும்?” என்று நீதிபதிகள் தமிழக அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, கோயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் வசதிக்காகவும் சிறப்பு கட்டண தரிசன முறை நடைமுறையில் இருப்பதாக தெரிவித்தது.
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், “பணம் செலுத்தினால் கடவுளை கட்டியணைக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியதுடன், விஐபி தரிசனத்திற்காக தனி நேரத்தை ஒதுக்குவது குறித்து ஏன் பரிசீலிக்கக்கூடாது என்றும் வினவினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதிலை தமிழக அரசு ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
“ரீல்ஸ் போடும் தவெக அரசு, மக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம்
