அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சில நாட்களிலேயே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்தது அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வரிசையில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமியும் சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இதையடுத்து அவர் கடந்த காலங்களில் அதிமுக குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பரவலாக பகிரப்பட்டன. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சில நாட்களிலேயே அரசியலில் இருந்து விலகுவதாக கோவிந்தசாமி அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் சூழ்நிலை காரணமாக வேறு ஒரு அரசியல் இயக்கத்தில் இணைந்ததாகவும், தற்போதைய சூழலில் தனது மனமும் உடலும் அரசியல் பணிக்கு ஒத்துழைக்காததால் அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது எந்த அரசியல் கட்சியிலும் தாம் இல்லை என்றும், இனி பொதுச்சேவை பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிந்தசாமியின் இந்த திடீர் முடிவு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அவரது அரசியல் பயணம் எவ்வாறு அமையும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், மேலும் சில அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணையக்கூடும் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
மீண்டும் அமலுக்கு வந்த பழைய நடைமுறை – தலைமைச் செயலகத்தில் நேரடியாக மனு அளிக்க அனுமதி
