தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் (DVAC) நடந்துள்ள அதிரடி உள் அரசியல் மற்றும் ஊழல் விவகாரங்களை, பிரபல ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் சவுக்கு ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
விபச்சார தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் ராஜலட்சுமி, மாதம் 50 லட்சம் ரூபாய் வரை மாமூல் வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகையில் 30 லட்சம் ரூபாய், DVAC இயக்குநர் அருணின் உதவியாளர் ஐயப்பன் மூலமாக இயக்குநருக்கே சென்றதாகச் சவுக்கு ஷங்கர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தப் பின்னணியில், கடந்த பிப்ரவரி 2026-ல் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலா, ராஜலட்சுமி மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்து அவரது வீட்டில் சோதனை நடத்தினார். ஆனால், வழக்குப் பதிவு செய்த நேர்மையான ஆய்வாளர் விமலாவை DVAC இயக்குநர் அருண் அதிரடியாக ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி ஜாய் தயாள் என்பவரை ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார். அதே நேரத்தில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவி ஆய்வாளர் ராஜலட்சுமி இன்னும் பணியில் தொடர்ந்து வருகிறார்.

நீதிமன்றம் தலையீடு
ஆய்வாளர் விமலாவின் இந்த ‘உள்நோக்கம் கொண்ட’ இடைநீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த சஸ்பெண்ட் உத்தரவுக்கு ஜூலை 9 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துக் காப்பாற்றியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகச் சவுக்கு ஷங்கர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தரப்பில் எழுப்பப்படும் முக்கிய கேள்விகள், மாதம் 50 லட்சம் மாமூல் வசூலித்ததாகக் கூறப்படும் அதிகாரி பணியில் நீடிக்கும் போது, நேர்மையாக வழக்குப் பதிந்த விமலாவை மட்டும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது யார்?.

“30 லட்சம் ரூபாய் மாமூல் பணம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருணுக்குச் சென்றது” என்ற குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தாமல், விமலாவை இடைநீக்கம் செய்தது உள்நோக்கம் கொண்டது அல்லவா?
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரின் இந்த நடவடிக்கை, முதல்வர் விஜயின் ‘ஊழலற்ற ஆட்சி’ என்ற வாக்குறுதிக்குக் களங்கம் ஏற்படுத்தாதா? இதுகுறித்து முதல்வர் அலுவலகம் விளக்கம் அளிக்குமா? . லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே விசாரணை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரமும், அதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதும் தமிழக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
