“இந்தியாவின் ‘கிங்மேக்கர்’ பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு, இளைஞர்களின் எழுச்சியை உருவாக்கி அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம் சூட்டியுள்ளார். அதேநேரம், விழா முடிந்து செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக அவர் கல்லூரியின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி பட்டமளிப்பு விழா
மதுரை திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலைக் கல்லூரியின் 38-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், சுமார் 700 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

மேடையில் அமைச்சர் உருகிய பேச்சு
விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர் விஸ்வநாதன், தனது கடந்த கால வாழ்க்கையை உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது, ”நான் ஒரு கிராமத்து இளைஞன், செருப்பில்லாமல் பொடிமணலில் நடந்து, கிழிந்த மஞ்சப்பையில் புத்தகங்களை எடுத்துச் சென்று, ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவன். எழுதப் பேனா கூட இல்லாமல் நண்பர்களிடம் வாங்கிப் படித்தவன். இன்று லஞ்ச ஊழலற்ற, மாற்றத்தைக் கொண்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசாட்சியில் நான் அமைச்சராக உள்ளேன்.
பெருந்தலைவர் காமராஜர் 1967-க்கு முன்பு முதலமைச்சர் பதவியே வேண்டாம் என்று சொல்லி, இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வந்த ‘கிங்மேக்கர்’. காமராஜருக்குப் பிறகு, 2026-ல் அதே காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக நான் இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கிறேன். இளைஞர்களின் எழுச்சியை உருவாக்கி, அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்.” என்று பேசினார்.

செய்தியாளர்களைத் தவிர்த்து பின்வாசல் வழியே ஓட்டம்
அமைச்சர் விஸ்வநாதன் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநரிடம் அண்மையில் புகார் கடிதம் ஒன்றை அளித்திருந்தார். இது தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பச் செய்தியாளர்கள் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தனர். பட்டமளிப்பு விழா முடிந்து வெளியே வந்த அமைச்சரிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்க முற்பட்டபோது, “பட்டமளிப்பு அங்கி (கவுன்) அணிந்திருப்பதால் பேட்டி கொடுக்க முடியாது, அதை கழற்றிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு உணவருந்தச் சென்றார்.
செய்தியாளர்கள் முன்வாசலில் காத்திருந்த நிலையில், ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகார் குறித்த கேள்விகளைத் தவிர்ப்பதற்காக, அமைச்சர் தனது காரைக் கல்லூரியின் பின்வாசலுக்கு வரவழைத்தார். பின்னர், பின்வாசல் வழியாகத் ரகசியமாக வந்து காரின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்ட அவர், செய்தியாளர்களைக் கண்டுகொள்ளாமல் தொலைபேசியில் பேசுவது போலப் பாசங்கு செய்தபடி அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.
