கள்ளக்குறிச்சி மாவட்டம், புகழ்பெற்ற திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் அண்மையில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்ற போது, சுமார் 150 ஆண்டுகள் பழமையான செப்புப் பட்டயங்களும், பிற்காலக் கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குடமுழுக்கு பணியின் போது கிடைத்த பொக்கிஷம்
திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற போது, அங்கிருந்த கொடிமரத்தின் (துவஜஸ்தம்பம்) கீழ் உள்ள பீடத்தில் செப்புத் தகடுகளும், கல்வெட்டுகளும் இருப்பது கண்டறியப்பட்டது. தேவஸ்தான பவர் ஏஜெண்ட் ஸ்ரீ. உ. வே. எஸ். கிருஷ்ணன் செய்த ஏற்பாட்டின் பேரில், தொல்லியல் துறை உதவி இயக்குநர் லோகநாதன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் ஆகியோர் இந்த வரலாற்று ஆவணங்களைப் படியெடுத்து ஆய்வு செய்தனர்.

செப்புப் பட்டயங்கள் கூறும் வரலாறு
ஆய்வில், கொடிமரத்தின் தாமிரக் கவசத்தின் மீது இருவேறு காலகட்டங்களைச் சேர்ந்த செய்திகள் பொறிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது,
1877-ஆம் ஆண்டு செய்திகள்: 21-ஆம் பட்டம் ஜீயர் ஸ்ரீ திருவேங்கடராமானுஜாச்சாரியார் சுவாமிகள் பொறுப்பேற்ற (1871) அடுத்த ஆண்டான 1872-இல், பட்டணம் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த மெ. இராமனுஜதாசன் என்பவர் கொடிமரக் கைங்கரியத்தை (திருப்பணியை) செய்து தரும்படி விண்ணப்பித்துள்ளார். அதன்பேரில், வா. திருவேங்கடராமானுஜதாசர் என்பவர் தாமிரத் தகடு உள்ளிட்ட சமஸ்த பணிகளையும் மேற்கொண்டு, ஈஸ்வர வருடம் மார்கழி மாதம் 8-ஆம் தேதி (1877) அதனைப் பொருத்தியுள்ளார்.
1995-ஆம் ஆண்டு செய்திகள்: மற்றொரு செப்புத் தகட்டில், ஸ்ரீ த்ரிவிக்ரம சுவாமி சன்னதியில் புதிய கொடிமரப் பிரதிஷ்டையானது, பவ வருடம் தைமாதம் 27-ஆம் தேதி (24.02.1995) வெள்ளிக்கிழமை காலை கும்ப லக்னத்தில் சிறப்பாக நடைபெற்றது என்ற தகவல் பதிவாகியுள்ளது.
பீடக்கல்லில் இருந்த இரு கல்வெட்டுகள்
தாமிரக் கவசத்திற்குக் கீழே இருந்த பீடக்கல்லில் இரண்டு கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருந்ததை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர், இதில் முதல் கல்வெட்டில், கலியுக ஆண்டு 4979, சாலிவாகன சகாப்தம் 18, பிரபவாதி 11, ஈசுவர வருடம் மார்கழி மாதம் 8-ஆம் தேதி (ஆங்கில ஆண்டு 1877) என்ற கால விபரம் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கல்வெட்டில், 21-ஆவது மதுரகவி இராமாநுஜ சம்பந்தி அவர்கள் மற்றும் வாலாஜாபேட்டை செட்டியார் அவர்களின் மகனான வெங்கடேச செட்டியார் திருவேங்கட இராமானுஜர் ஆகியோரால் இந்த திருப்பணி பூர்த்தி செய்யப்பட்டது என்ற விபரம் உள்ளது. இக்கல்வெட்டின் இறுதியில் ‘வைசியர் கோத்திரம்’ என்று குறிப்பிட்டு நிறைவு பெற்றுள்ளது. கோவில் கொடிமரப் பீடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்தச் செப்பேடுகளும் கல்வெட்டுகளும், திருக்கோவிலூர் பெருமாள் கோவிலின் பிற்காலப் பராமரிப்பு மற்றும் திருப்பணி வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன.
