சினிமாவில் சட்டமன்றம் நடப்பது போல் தமிழக சட்டப்பேரவை நடக்கிறது என கடும் விமர்சனம்
தமிழகத்தில் தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது; அப்படியே நிலைத்தாலும் கடன் 10 லட்சம் கோடி, 20 லட்சம் கோடியாக உயர்ந்து மக்களைக் கடனாளியாக்கிவிடும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடைபெறும் அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வேலூர் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதன் விவரம்:
கட்டுக்கடங்காத கடன் மற்றும் விலைவாசி உயர்வு
“தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களிலேயே ரூ.28,000 கோடி கடன் வாங்கியுள்ளனர். அதில் வருவாய் செலவு மட்டுமே ரூ.25,000 கோடி. நிதி மேலாண்மையைச் சரி செய்யக் குழுக்கள் அமைத்தும் பலனில்லை. தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. சர்க்கரை கிலோ ரூ.75-க்கு விற்கிறது. அரிசி கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. இதுகுறித்துச் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது உணவுத்துறை அமைச்சரிடமிருந்து சரியான பதில் வரவில்லை.”
சினிமா பாணியில் நடக்கும் சட்டமன்றம் “சினிமாவில் சட்டமன்றம் நடப்பது போல் இன்றைக்குத் தமிழ்நாடு சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் தன்வசம் வைத்துள்ள துறை சார்ந்த மானியக் கோரிக்கைக்குக் கூட வேறொரு அமைச்சர் பதில் சொல்கிறார்.
சபாநாயகர் 10 மணி நேரம் அவையை நடத்தியதாகப் பெருமைப்படுகிறார்கள். ஆனால், அதில் இரண்டரை மணி நேரம் கூட மக்கள் பிரச்சனை பேசப்படவில்லை. மீதி ஏழரை மணி நேரமும் அவையின் பொன்னான நேரத்தை வீணடித்துள்ளனர்.”
நேரலையில் ஆளுங்கட்சி அராஜகம் மறைப்பு
“சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. ஆனால், தற்போதைய நேரலையில் எதிர்க்கட்சிகள் பேசுவதையோ அல்லது ஆளுங்கட்சியின் அராஜகத்தையோ காட்டுவது கிடையாது. எதிர்க்கட்சிகள் மக்களுக்காகக் குரல் எழுப்பி வாக்குவாதம் செய்வதை மட்டுமே காட்டுகின்றனர். ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே நேரலை ஒளிபரப்பு செயல்படுகிறது.”
எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் விவகாரம்
“எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் விவகாரத்தில், அதிமுக உறுப்பினர்கள் தங்களின் விருப்பப்படி முடிவு செய்து கொள்ளலாம். நான் முதலமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது அரசின் காரையே பயன்படுத்தினேன். தற்போது எனக்குச் சொந்தக் கார் இருப்பதால், அரசாங்கம் தரும் காரை நான் ஏற்கவில்லை.”
பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது குறித்து
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த Z+ பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “பாதுகாப்பு விவகாரம் குறித்து முதலமைச்சராக உள்ள விஜய் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். திமுக தலைவரிடம் கேட்டால் அதற்கு உண்டான பதில் கிடைக்கும்” எனக் கூறினார்.
