தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்- 128 பேர் மயங்கி விழுந்தததால் பரபரப்பு
கடந்த 4 நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் கொட்டு மழையிலும், கொசு கடிகளிலும் இரவுபகலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ”சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக இரவும் பகலுமாய் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டதால் ஊதிய முரண்பாடு நிலவுவதாகவும், இதனால் தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பல ஆண்டு காலம் பாதிக்கப்படுவதாகவும் கூறி “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கடந்த 28-ம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் போராடிவரும் ஆசிரியர்கள், 4-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டுள்ள இந்த போராட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் இதுவரை 128 பேர் மயங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.


