கட்டிட பணி நடைபெறும் இடத்தில் விபத்து – வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
கட்டிட பணி நடைபெறும் இடத்தில் விபத்து. இரண்டாவது தளத்திலிருந்து விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு. மேலும் ஒருவர் படுகாயம் என்றும் ஈரமான சுவருடன் சேர்ந்து கீழே விழுந்து இறந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் ஒப்பந்தக்காரர் செல்வகுமார் என்பவர் அடுக்கு மாடி கட்டிடம் கட்டி வருகிறார். வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை இரண்டாவது தளத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஈரமாக இருந்த ஒரு சுவர் இடிந்து விழுந்ததுடன், வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த நவ்ஷாத் ஷேக்( வயது 32 ), குஸ்முதீன் (வயது 36) ஆகிய இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் நவ்ஷாத் ஷேக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குஸ்முதின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


