மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசு உயர்த்தியது.
இதன்படி, தமிழகத்தில் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

இதன்படி, வரும் 2024-25 நிதி ஆண்டுக்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2023-24 நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல்1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தவிர்த்து, 2024 – 25ம் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்த 1229 கோடி ஒதுக்கீடு செய்தும் ஊரக வளர்ச்சி துறை அரசாணை வெளியீட்டுள்ளது.


