சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டபோது செய்தியாளர்களுக்குக் காரசாரமாகப் பேட்டியளித்துள்ளார்.
தலைமைச் செயலகம் முன் வெடித்த போராட்டம்
நீட் முறைகேடுகளுக்கு எதிராகவும், நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வலியுறுத்தியும் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு இன்று தலைமைச் செயலகத்திற்கு வெளியே திடீர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டார். “மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்” எனக் கூறி அவர் உரத்த குரலில் முழக்கங்களை எழுப்பினார். பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகப் பகுதியில் தொடர்ந்து முழக்கமிட்டுச் சென்ற அவரைப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
“மாணவர்களை அடிப்பது ஜனநாயக விரோதம்” — அறிவு ஆவேசம்
கைது செய்யப்பட்ட பாடகர் அறிவை, தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதற்காகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் அறிவு தனது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்தார். “மாணவர்களை அடிக்கக் கூடாது! நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மாணவர்களை அடித்து நொறுக்குவது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும்.” என பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு தெரிவித்துள்ளாா்.

முதலமைச்சருடன் சந்திப்பு: எதிர்பார்ப்பில் அரசியல் களம்
நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் ‘தெருக்குரல்’ அறிவைக் காவல்துறையினர் கைது செய்த கையோடு, முதலமைச்சரைச் சந்திக்க அழைத்துச் சென்றுள்ளது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ‘தவெக’வின் கொள்கைப் பாடலைப் பாடியவர் என்ற முறையில், முதலமைச்சர் விஜய்யிடம் நீட் தேர்வுத் தடை மற்றும் போராடும் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்துப் பாடகர் அறிவு நேரடியாக வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
