மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பாமக எம்.எல்.ஏ-க்களுடன் தலைமைச் செயலகம் சென்ற அவர், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


பரபரப்பை கிளப்பிய வீடியோ:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டும் பணிகளை கர்நாடக அரசு சட்டவிரோதமாகத் தொடங்கியுள்ளதாகத் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளதால், தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கோரிக்கை:
கர்நாடக அரசின் இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். இது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும் எனக் கோரி அமைச்சர் ஆனந்திடம் அவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அரசின் செயல்பாட்டுக்கு அன்புமணி பாராட்டு:
அமைச்சரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “எதிர்க்கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. இதுவே ஒரு பெரிய பாசிட்டிவான மாற்றம் தான்” என்று தற்போதைய அரசின் அணுகுமுறையைப் பாராட்டிப் பேசினார்
