Homeசெய்திகள்கட்டுரைமதுரையில் EVM மோசடி? வெளியான அமித்ஷா அறிக்கை! எச்சரிக்கும் செந்தில்வேல்!

மதுரையில் EVM மோசடி? வெளியான அமித்ஷா அறிக்கை! எச்சரிக்கும் செந்தில்வேல்!

-

- Advertisement -

அதிமுகவை கபளீகரம் செய்தோ, வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தோ தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற பெரிய சதி திட்டத்தோடு அமித்ஷா களமிறங்கி உள்ளதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

senthilvel new
senthilvel new

மதுரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொன்னதன் பின்னணி குறித்தும், கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதன் அரசியல் குறித்தும் ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் தமிழகம் வந்தது தொடர்பாக பாஜக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும், அமைச்சரவை உள்ளிட்ட அனைத்தையும் இருவரும் சேர்ந்து பேசிதான் முடிவெடுப்பார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு வலதுசாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் தற்போது மதுரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றே சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியால் அதை மறுத்து பேச முடியாத நிலையில் உள்ளார் என்பது வேதனையான ஒன்று. தமிழ்நாட்டில் பாஜக எப்படியாவது காலூன்றுவதற்காக சில வேலைகளை செய்கிறார்கள்.

m

பாஜக நாடு முழுவதும் ஒரே பாணியில் வேலை செய்கிறார்கள். முதலில் ஒரு மாநிலத்தில் பாஜக வளர்ச்சி அடைந்துவிட்டதாக தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். அடுத்தபடியாக யார் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்பதாகும். அவர்களுடன் கொஞ்ச காலத்திற்கு பயணித்து, அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள். கடைசியில் அவர்களை கீழே தள்ளிவிட்டு, அந்த இடத்திற்கு வந்துவிடுவார்கள். இதையே தான் பாஜக தமிழ்நாட்டில் முயற்சிக்கிறது. அதிமுக உடன் கூட்டணி அமைப்பது. தேர்தல் முடியும் வரை அதிமுக ஆட்சிதான் என்று சொல்வது. கூட்டணி ஆட்சி என்று சொன்னால் பெரும்பான்மை சமூக வாக்குகள் வராது என்று பயப்படுகிறார்கள். அதனால் எடப்பாடியை வைத்து கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்ல வைப்பது. நாளைக்கு ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், அமித்ஷா அன்றைக்கே சொன்னாரே கூட்டணி ஆட்சி என்று சொல்வார்கள். அதிமுகவை கபளீகரம் செய்தோ அல்லது மகாராஷ்டிராவை போன்று வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தோ தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற பெரிய சதி திட்டத்தோடு அமித்ஷா களமிறங்கி உள்ளார். அதனுடைய ஒரு பகுதிதான் கூட்டணி ஆட்சி என்று சொல்வது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்களும், அவர்களுடைய வாக்கு சதவீதத்தில் பாதியளவு இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்களும் வழங்கப்பட்டன. தற்போது 50 இடங்களை கேட்கும் பாஜக, அதில் 15 எம்எல்ஏக்களை பெற்றால் கூட, அவர்கள் எந்த விதமாக செயல்படுவார்கள் என்று தெரியாது. பாஜக வளர்ந்துவிட்டது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து தில்லு முள்ளு வேலைகளையும் செய்வார்கள். 15 எம்எல்ஏக்களை பெற்றுவிட்டால் கூட 2029 தேர்தலில் மோசடிகளை செய்வதற்கு அவர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்கள் ஒரு மாநிலத்தை  குறிவைக்கிறார்கள் என்றால் 20 வருடங்கள் காலக்கெடு வைக்கின்றனர். 20 வருடங்களுக்கு பின்பு ஆட்சியை பிடிக்க இப்போதே வேலை செய்வார்கள். கீழடி அகழாய்வுக்கு அறிவியல் பூர்வ ஆதாரங்களை கேட்கும் மத்திய அரசு, சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க பல கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளனர். சரஸ்வதி நதி உள்ளதற்கு என்ன தரவுகள் உள்ளன? சங்கம் வளர்த்த மதுரை மண்ணில் வந்து அமித்ஷா முத்துராமலிங்க தேவரை புகழ்ந்து பேசுகிறார். ஆனால் அதே ஊரை சேர்ந்த பாண்டியன் ஐஏஎஸ் குறித்து, நீங்கள் எவ்வளவு இழிவாக பேசினீர்கள். பாண்டியன் மீது திருட்டு பட்டம் சுமத்தினார்கள். அதை மக்களால் மறக்க முடியுமா?

சமஸ்கிருத பண்பாட்டை நிறுவத் துடிக்கும் பாஜக அரசு தமிழரின் பண்பாட்டிற்கு எதிரானது – வைக்கோ ஆவேசம்

கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அம்பேத்கர் சொல்வது போல இந்திய நாகரிகம் என்பது ஆரியம் – திராவிடம் இடையிலான போர்தான். மற்ற எந்த மாநில மக்களும் இந்த சண்டைக்குள் செல்வது கிடையாது. ஆனால் தமிழ் அதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறது என்றால்? தமிழுக்கு என்று தொன்மை இருக்கிறது, வரலாறு இருக்கிறது. வேத மரபுதான் இந்தியாவின் பழமையான மரபு என்று அவர்கள் சொல்கிறார்கள். அதற்கு முற்றுலும் மாறாக தமிழ் மரபுதான் பழமையானது என்று நாம் சொல்கிறோம். சமஸ்கிருத துணை இன்றி எந்த மொழியும் இயங்க முடியாது அவர்கள் சொல்கிறபோது, கால்டுவெல் சமஸ்கிருதத்தின் துணை இன்றி இயங்குகிற வல்லமை கொண்ட ஒரே மொழி தமிழ் என்று அவர் சொல்கிறார். அதனால்தான் ஹெச்.ராஜா இன்று வரை கால்டுவெல்லை திட்டிக்கொண்டிருக்கிறார். வேத மரபுக்கு எதிராக தொல்லியல் ஆய்வுகள் இருப்பதால் அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

மற்றொன்று கீழடியில் ஆய்வுகளை நடத்துவது ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கீழடியில் ஆய்வு செய்வது போல செய்தார்கள். பின்னர் திடீரென மண்ணைப் போட்டு மூடினார்கள். திமுக அரசு வந்த பிறகு மாநில அரசின் செலவில் கீழடி அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் மூலம் தமிழ் சமூகத்தின் வரலாறு தொன்மையானது என்று நிரூபிக்கப்படுகிறது. கீழடியில் இதுவரை எந்த கடவுளின் சிலையும் கண்டெடுக்கப்படவில்லை என்பதும் முக்கியமான விஷயமாகும். ஒருவேளை அங்கு ஏதேனும் கடவுளர் சிலை கிடைத்திருந்தால் உடனடியாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழர்களின் வாழ்வும், வரலாறும், தொன்மையும் இயற்கையை சார்ந்தே சென்றுள்ளது என்பது உறுதியாகிறது. அப்போது இதனை ஏற்றுக்கொள்வதால் மத்திய அரசுக்கு என்ன லாபம் உள்ளது? இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. பாஜக உடன் கூட்டணி சேர்ந்ததால் அவர் கருத்து தெரிவிக்காமல் இருக்கலாம். வைகைச்செல்வன், கே.பி.முனுசாமி போன்றவர்களுக்கு இது தெரியும். ஆனால் அவர்களாலும் பேச முடியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ