விஜய் கட்சி தொடங்கியதால் நாம் தமிழர் கட்சி நாள்தோறும் கரைந்து கொண்டிருப்பதாகவும், கட்சியை காப்பாற்றவே அவர் நாள்தோறும் பெரியார் குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். சீமானுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அண்ணாமலை மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தொடர் அவதூறுகள் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பெரியார் குறித்து தனது விமர்சனங்களை தொடர்ந்து முன்வைப்பேன், தனது கருத்துக்களில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று சீமான் கூறுகிறார். பெரியாரை ஒரு புரட்சியாளர் என்று நிருபித்தால் மன்னிப்பு கோர தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு சாதாரண மனிதனாக நான் சொல்கிறேன் பெரியார் என்ன செய்தார்?, என்ன செய்யவில்லை? என்று புரிந்து கொள்ளும் அறிவும், தெளிவும் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது. ஒன்றும் செய்யாத, புரட்சி செய்யாத பெரியாரை ஏன் கொள்கை வழி காட்டியாக அறிவித்தீர்கள்?. கட்சி ஆரம்பித்து 6 ஆண்டுகள் வரை பெரியாரின் புகழை பாடிக்கொண்டிருந்தவர் எந்த சீமான்?. இந்த முரண்பட்ட கருத்துக்களை சொல்வதால்தான் சீமானுக்கு வேறு அஜெண்டா உள்ளது என குற்றம் சாட்டுகிறோம். நிச்சயமாக பெரியாரை பற்றியோ, அவரை மையப்படுத்திய கொள்கைகள் பற்றியோ சீமானுக்கு பிரச்சினை இல்லை. என்ன சொன்னால் தமிழ்நாட்டில் அமைதியை குலைக்கலாம் என்ற அந்த ஒற்றை நோக்கம் தான் சீமானுக்கு உள்ளது. இது பாஜகவின் செயலாகும். பெரியார் மண், சமூகநீதி மண் என்ற பார்வையை மாற்றுவதுதான் பாஜகவின் முக்கிய திட்டம். ஜெயலலிதா, மரணத்துக்கு பின்னர் எம்ஜிஆர் புகழை பாடினார்கள். ஜெயலலிதா புகழை பாடினார்கள். ஆனால் அதிமுகவினர் யாரும் அந்த பக்கம் செல்லவில்லை. அப்போது வேறு என்ன சொல்லலாம். திமுகவை ஒழிக்க வேண்டும். அதற்கு மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது பெரியாரை அவமதிப்பு செய்ய வேண்டும் என்கிற பாஜகவின் அஜெண்டாவை கையில் எடுத்துக்கொண்டு சீமான் வருகிறார். அதுவும் ஆரம்பத்தில் பெரியாரை புகழ்ந்து கொண்டிருந்த சீமான், திடீரென பெரியாரை திட்டுகிறார் என்றால் என்ன நோக்கம்?
தற்போது திடீரென பெரியார் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டாரா?. அல்லது கல்லறைக்குள்ளே புரண்டு படுத்தாரா?. என் கருத்து அதுவல்ல இது என்று. சீமான் கட்சி தொடங்கியபோது பெரியார் மறைந்துவிட்டார். அவரது கொள்கைகள், பேச்சு, எழுத்து எல்லாம் புத்தக வடிவில், அச்சு வடிவில் உள்ளது. அதைதான் சீமான் படித்தார். நானும் படித்தேன். பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவே இல்லை. அவர் படித்ததுபோல தான் நானும் படித்தேன். அதில் என் புரிதால் என்னவோ? அதுதான் இன்றும் இருக்கிறது. ஏனென்றால் பெரியார் அதற்கு பின்னர் தனது கருத்துக்களை மாற்றிக்கொள்ள வில்லை. எவனும் மாற்றவும் முடியாது. எவனுக்கும், எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை. அப்போது என்ன புரிதல் உங்களுக்கு வந்தது? அதனை நேர்மையோடு சீமான் அதை விளக்க வேண்டும்.
சீமானை தனது கொள்கை பார்ட்னர் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது பார்த்தீர்களா?. பெரியாரை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. யாருடைய குரலை, உங்கள் கொள்கையை மாற்றிக்கொண்டு நீங்கள் பேசுகிறீர்கள் சீமான். உங்களின் நோக்கம் என்ன?. பெரியார் அதை பேசினார், இதை பேசினார் என்கிறீர்கள். இதெல்லாம் இப்போது சமுதாயத்திற்கு அவசியமா? அவர் பேசியது என்ன கண்டென்ட் என பல முறை பேசிவிட்டோம். பெரியார் புராணங்களில் சொல்லப்பட்டதை கூறி, அது முறையற்றது என்றார். அதை நம்புகிறாயா? என்று கேட்டார். அதன் மூலம் கடவுள் மறுப்புக் கொள்கையை புகுத்தினார். மக்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மற்ற விஷயங்களாலும், அவருடைய கொள்கைகளாலும் வளர்ந்த ஒவ்வொரு குடும்பமும் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். சீமான், தமிழிசை உள்பட. இடஓதுக்கீட்டில்தான் அவர்கள் படித்தனர். அயோத்தி தாசரில் தொடங்கியதாக இருக்கட்டும் அதில் பெரியாரின் பங்கு இல்லையா?.இதை எல்லாம் தெரிந்துகொண்டு அவர் என்ன புரட்சி செய்தார்? என கேட்டால், எதை தூக்கி காட்ட விரும்புகிறீர்கள்.
நீதிக்கட்சி காலத்தில் இருந்து வந்த அமைப்புகள் தான் திக, திமுக, அதிமுக, மதிமுக எல்லாம். பெரியாரின் கொள்கையை பின்பற்றிதான் திமுக, அதிமுக வளர்ந்தது. அயோத்தி தாசர் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார் என்பதற்காக அவரை தூக்கி வைக்க வேண்டும் என என்ன அவசியம் உள்ளது? அவரை அவமதிக்கக்கூடாது, அவரது பங்களிப்பு எதுவும் இல்லை என்று சொல்லக்கூடாது. இவர்களை எல்லாம் தங்களின் எதிரிகள் என்று திமுக என்றாவது அறிவித்துள்ளதா? அயோத்தி தாசரை நாங்கள் மதிக்க மாட்டோம் என அதிமுக சொன்னதா? இவர்களை யாராவது அவமதிப்பு செய்துள்ளனரா? அல்லது புறக்கணிப்பு செய்துள்ளனரா?. எங்கள் தலைவர் பெரியார், அதற்கு அடுத்து அண்ணா, அதற்கு அடுத்து எம்ஜிஆர், அதற்கு அடுத்து கலைஞர், அதற்கு அடுத்து ஜெயலலிதா, தற்போது ஸ்டாலின் என்று இரண்டு இயக்கங்களும் ஒரு பாதையில் வந்துகொண்டிருக்கும் போது, அவரை சொல்லவில்லை, இவரை சொல்லவில்லை என்று கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை?. அது அவர்கள் கட்சி. யாரையாவது அவமானப்படுத்தினால் கேட்கலாம். நீங்கள் ஏன் ஹெட்கேவாரை, கோல்வால்கரை முன்னிலைப்படுத்த வில்லை என்று கேட்கலாமா? அவர்கள் விமர்சனத்துக்குரிய கருத்துக்களை தெரிவித்திருக்கலாம் உங்கள் பார்வையில். அவர்கள் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் என்பது பாஜகவின் பார்வையில். ஏன் ஹெட்கேவாரை, கோல்வால்கரை, வீர சாவர்கரை யாரும் புகழ்ந்து பேசவில்லை? என கேட்பது எவ்வளவு பெரிய மடத்தனம். அவர்களை யார் புகழ் பாடுவார்களோ, அவர்கள் தான் பாடுவார்கள் அதற்கு தான் ஒரு இயக்கம் வைத்துள்ளனர். அதற்கு தான் கட்சியை வளர்த்துக்கொண்டுள்ளனர். இந்த தெளிவு மக்களுக்கு உள்ளது. அதை குழப்பும் வேளையை தான் சீமான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
பாஜக குறித்த அவரது பார்வை நமக்கு தேவையில்லை. வீம்புக்கு என்று பெரியாரை விமர்சிக்கலாமா? பொய் சொல்லலாமா என்று தான் நாம் கேட்கிறோம். பெரியார் என்ன செய்தார் என்று கேட்பதே மடத்தனம். பெரியார் என்ன செய்யவில்லை என்றுதான் கேள்வி எழ வேண்டும். இன்று ஆண்களும் பெண்களும் நல்ல உடைகள் அணிந்து மானத்தோடு வாழ யார் காரணம் என்று சீமான் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும். வேறு யாரும் சொல்லலையா? என்று நக்கலாக கேட்கலாம். பெரியார் செய்தாரா? இல்லையா? என்பது தான் எனது கேள்வி. பெண்கள் மாறாப்போடு சேலை அணிய யார் காரணம்? யாரெல்லாம் காரணம்? பெரியாரை தவிர இந்த வேறு யாரும் இந்த சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று அண்ணாவோ, கலைஞரோ, ஸ்டாலினோ, அல்லது எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ, எடப்பாடியோ சொல்லியிருக்கிறார்களா? அப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை. நான் ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு கட்சி நடத்துகிறேன் என்றால், நான் யாரை சொல்ல வேண்டுமோ அவரைத்தான் சொல்வேன். அயோத்தி தாசரை திருமாவளவனை தவிர வேறு யாரும் அதிகளவில் சொல்லவில்லை. ஏனெனில் கொள்கை சார்ந்து, சமுதாயம் சார்ந்து பல்வேறு விஷயங்கள் அவருக்கு இருக்கும். முத்தரையர் சங்கம் ஒரு கட்சி ஆரம்பித்தால் பெரும்பிடுகு முத்தரையர் பற்றி அவர்களை தவிர வேறு யாரும் பேசுவார்களா?. இது சாதாரண அரசியலாகும். நீ ஏன் சொல்லவில்லை என்று கேட்டால், அப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்? எதற்காக நீங்கள் ஹெட்கேவாரை, கோல்வால்களை கொண்டாடவில்லை?. ஏனென்றால் அவர்களை யார் கொண்டாடுவார்களோ, அவர்கள்தான் கொண்டாடுவார்கள். நமக்கு என்ன வந்தது. அவர்களை கொள்கை தவிர்த்து, விமர்சிப்பது தான் தவறு?.

அரசியல் ரீதியாக பாஜகவின் பீ டீம் சீமான் என கூற யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் நீங்கள் கொள்கை ரீதியாக போகிறீர்கள். பெரியாரை சீண்டுகிறீர்கள். பாஜகவுடன் சீமான் கூட்டணி வைத்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் பெரியார் சிலையை உடைப்பேன் என்று கூறும் ஹெச்.ராஜா இருக்கும் ஒரு கட்சியில், பெரியாரை விமர்சித்துவிட்டு சென்று சேர்ந்தீர்கள் என்றால் அது தவறு. ஓட்டு பிச்சைக்காக ஒரு கட்சியோடு இன்னொரு கட்சி சேர்வது வழக்கம்தான். ஆனால் பெரியாரை சீண்டக்கூடாது. பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது. சொல்லாததை சொன்னதாக சொல்லக்கூடாது. அண்ணாமலை ஓடோடி வந்து சீமான் சொன்னது உண்மைதான், ஆதாரங்களை வெளியிடுவேன் என்றார். ஆனால் அவர் வெளியிடவில்லை. பெரியார் எதிர்ப்பு, திராவிட சித்தாந்த எதிர்ப்பு இதுதான் தமிழ்நாட்டு பாஜகவின் அடிப்படை சித்தாந்தம். அந்த கொள்கையை சீமான் கையில் எடுத்துள்ளபோது, அண்ணாமலை ஓடோடி சென்று அவரை ஆதரித்தால் நம்மை நம்பி சிலர் வருவார்களா? என்ற எண்ணம்தான். தற்போது பிராமணர் சங்கத்தினர் சீமானை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவு நாட்களாக பாஜகவை ஆதரித்தவர்கள், தற்போது சீமானை ஆதரிக்கிறார்கள். இந்த ஆபத்தை அண்ணாமலை புரிந்துகொள்ளவில்லை. உங்களுடைய தீவிர ஆதரவாளர்கள் சீமானை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர். அரசியல் ரீதியாக அண்ணாமலை தவறு செய்துவிட்டார். அதை குறைத்துக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது.
ஏனென்றால் என்ன செய்தால் கட்சியை வலுப்படுத்தலாம் என சீமான் துடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே சீமானுக்குதான் அடி. அடுத்து விசிகவுக்கு, அண்ணாமலைக்கு பாதிப்பு இருக்கிறது இளைஞர்கள் எங்கு சூழ்ந்து இருக்கிறார்களோ? அங்கே அடி இருகிறது என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதை சீமான் புரிந்துகொண்டிருக்கிறார். நாதகவில் தினமும் 10 நிர்வாகிகள் வெளியே போய் கொண்டிருக்கிறார்கள். இது நீடித்தால் அந்த கட்சிக்கு நல்லது அல்ல. அதனால் கரைந்துகொண்டிருக்கிற கட்சியை, ஆதரவு தளத்தை மீண்டும் வலுவாக்க சீமான் ஒரு பார்வை பார்த்து கண்ணிவெடிகளை போட்டுக் கொண்டிருக்கிறபொழுது ஓடோடி சென்று நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றால் அது அரசியல் ரீதியாக சரிதானா?. இனதால் பாஜக ஆதரவு தளத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
சீமான் விவகாரத்தில் விஜய் கண்டனம் தெரிவிக்காதது ஏன் கேட்கிறார்கள். ஆனால் விஜய்க்கு அரசியல் குறித்த புரிதல், ஈடுபாடு, ஆர்வம் குறைவாக உள்ளதாக தான் தோன்றுகிறது. முதல் மாநாட்டில் அவர் பேசியது சிறப்பாக இருந்தது. அதன் பின்னர், அம்பேத்கர் மாநாட்டில் அவரது பேச்சில் நாடகத்தனம் இருந்தது. அந்த மாநாட்டில் திருமாவளவன் குறித்து கொளுத்திபோடத்தான் செய்தார். அது நாகரீக அரசியல் அல்ல. மாநாட்டிற்கு பின்னர் அவரது எந்த செயல்பாடும், வரவேற்க தகுந்ததாக இல்லை. மாறாக குறைந்தபட்சமாக ஒரு அரசியல் தலைவராக செய்ய வேண்டியவற்றை கூட அவர் செய்யவில்லை. பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக விவாரகத்தில் ஆளுநரை சந்தித்த விஜய், நடைபெற்ற சம்பவத்திற்கு வேந்தர் என்ற முறையில் அவர்தான் முதல் பொறுப்பு எடுத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் வாய்ப்பை கோட்டை விட்டார்.
சட்டம், ஒழுங்கிற்கு காரணம் முதலமைச்சர் தான் என்று கூறி அரசியல் செய்திருக்கலாம். நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்கவில்லை. பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டேன், பேச மாட்டேன், சினிமா தளத்தை விட்டு வெளியே வர மாட்டேன் என்று சொல்லும் விஜயை ஆட்சியில் அமர்த்துவது பற்றி மக்கள் யோசிக்கக்கூட மாட்டார்கள். யோசிக்கவும் கூடாது. விஜய் தன்னை மாற்றிக்கொள்ளாத வரை தமிழ்நாட்டு அரசியலில் விஜய் தவிர்க்கப்பட்டால் தவறில்லை. விஜய் இன்னும் எதார்த்த அரசியலையே செய்யவில்லை. பெரியார் விவகாரத்திற்கு கண்டனம் தரும் அளவிற்கு இன்னும் அவருக்கு பக்குவம் ஏற்படவில்லை. தவெகவின் கொள்கை வழிகாட்டியான பெரியார் குறித்து விமர்சனத்திற்கு முதல் ட்வீட் அவரிடம் இருந்து வந்திருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.