ஆவடியில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அதிவேக காற்றின் காரணமாக ராட்சத பேனர்கள் கிழிந்து சாலையில் விழுந்தும் மற்றும் பேரிக்காடுகள்
காற்றில் தூக்கி வீசபட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்காததால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்.
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் எனவும் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம்,திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வழக்கத்திற்கு மாறான சூறை காற்றுடன் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ஆவடி மாநகராட்சி உட்பட்ட நந்தவனமேட்டூர் பகுதியில் ராட்சத விளம்பர பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவை அதிவேக காற்றின் காரணமாக துண்டு துண்டுகளாக கிழிந்தது.மேலும் கிழிந்த துண்டுகள் பலத்த சூறைகாற்று வீசி வரும் நிலையில் பிரிந்து ஆவடி – பூந்தமல்லி பிரதான சாலையில் பறந்து சென்று விழுந்தது. சாலையில் செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.இதே போன்று வைக்கப்பட்டுள்ள மற்ற ராட்சத பேனர்களும் கிழிந்து தொங்கி வருவதால் வாகனத்தில் செல்வோர் மீது விழுந்தது விபத்து ஏற்படும் எனவும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று சூறை காற்றில் சாலையில் தடுப்புகளுக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகாடுகள் காற்றில் தூக்கி சாலையில் வீசப்பட்டன.அதிஷ்டவசமாக யாரும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இந்த நிலையில் அவ்வழியே சென்ற காவலர்கள் சாலையில் கிடந்த பேரிகாடுகளை கொட்டும் மழையில் பொறுப்புணர்வுடன் அப்புறப்படுத்தி சாலை ஓரத்தில் வைத்து சென்றனர் .நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கையாக ஆவடியில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ராட்சத பேனரால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.