
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அண்ணாமலை வருகையை முன்னிட்டு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக பேனர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அண்ணாமலை இன்று நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று மாலை 5 மணி அளவில் ஆவடி செக்போஸ்ட் பகுதியில் இருந்து ஆவடி மாநகராட்சி அலுவலகம் வரை நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அண்ணாமலை வருகையை முன்னிட்டு பாஜக நிர்வாகிகள் ஆவடி செக்போஸ்ட் முதல் ஆவடி மாநகராட்சி அலுவலகம் வரை அனுமதி இன்றி பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக வைகப்பட்டுள்ள பேனர்களை காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பதற்றம் ஏற்பட்ட நிலையில், பாஜகவினர் உடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பாஜக திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஸ்வினை கைது செய்து காருக்குள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஆவடியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


