ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு – மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ். இவர் மழலை பள்ளியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற அவர் இ பைக்கை வாசலில் பார்க்கிங் செய்து விட்டு சென்றுள்ளார். அப்போது இ-பைக்கின் பேட்டரியில் இருந்து லேசாகப் புகை வந்துள்ளது.
இதைக் கண்ட வெளியில் இருந்தவர்கள் நீதா அகிலேஷிடம் தெரிவித்துள்ளனர். அவர் வெளியில் வந்து பார்த்த போது, புகை வந்த இ பைக் திடீரென்று கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பான் கொண்டு தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். இருந்த போதிலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
சாலை அருகே மின்சார கம்பத்தின் கீழ் கொழுந்து விட்டு இ. பைக் எரிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் தீயை தண்ணீர் கொண்டு பீய்ச்சி அடித்து முற்றிலுமாக அணைத்தனர்.
இருப்பினும் இ பைக் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடானது.இந்தச் சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.