அம்பத்தூரில் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (27). இவரது தந்தை பாலாஜி 2000 ஆம் ஆண்டு விபத்தில் இறந்த நிலையில், தாய் கிருஷ்ணவேணியும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து ஒரகடத்தில் உள்ள தாய் மாமா வீட்டில் நிவேதாவும், அவரது சகோதரர் சந்திரபாபுவும் (25) வசித்து வந்தனர். கல்லூரி படிப்பை முடித்து இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இதனிடையே ஓராண்டுக்கு முன்பு நிவேதாவுக்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், அம்பத்தூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்ற நிவேதா அடுக்குமாடி குடியிருப்பின் மேல் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக நிவேதாவின் சகோதரர் சந்திரபாபு அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் காரணமாக கணவர் வீட்டிற்கு சென்று வாழ வேண்டும்; சமையல், வீட்டு வேலைகள் செய்ய தெரியாது போன்ற காரணத்தினால் நிவேதா கடந்த சில நாட்களாகவே தனது அக்கா மன அழுத்தத்தில் இருந்ததாக சகோதரர் சந்திரபாபு தெரிவித்துள்ளார். அத்துடன் மனநல மருத்துவரிடம் நிவேதா சிகிச்சை பெற்று வந்த நிலையில், திருமணத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.