சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.
சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இன்று இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது , பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் இருவரும் நடந்து கொண்டனர் என காவல்துறையினர் மீண்டும் தெரிவித்தனர். இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்க போகிறீர்கள்? என நீதிபதி ஜெகதீஷ்சந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர் சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.