நில உரிமையாளர்கள் பத்திரம் மற்றும் பட்டா தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஒரு நிலம் யாருக்கு சொந்தம் என்பதை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாக பார்க்கப்படுவது பத்திரமும் பட்டாவும் தான்.
தமிழ்நாடு வருவாய் துறை வழங்கும் பட்டாவில் நிலத்தின் வகை, உரிமையாளரின் பெயர், சர்வே எண் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெறுகின்றன. ஒரே நிலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால், அந்த நிலத்திற்கு கூட்டு பட்டா (Joint Patta) வழங்கப்படுவது வழக்கம்.

கூட்டு பட்டா – ஏற்படும் சிக்கல்கள்
கூட்டு பட்டா கொண்ட நிலத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ அனைத்து உரிமையாளர்களின் ஒப்புதலும் அவசியம். இதனால் பல நேரங்களில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படலாம்.
இந்த சிக்கல்களைத் தவிர்க்க, உரிமையாளர்கள் தங்கள் பங்குக்கான தனி பட்டா (Individual Patta) பெற முயற்சிக்கின்றனர். இதற்காக முதலில் நிலத்தை உட்பிரிவு (Sub-division) செய்ய வேண்டும்.
தனி பட்டா பெற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகள் உள்ளன.
ஆன்லைன் மூலம் தனி பட்டா பெறுவது எப்படி?
TamilNilam இணையதளமான https://tamilnilam.tn.gov.in/ முகவரிக்கு சென்று “Patta Transfer” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
பதிவேற்ற வேண்டிய ஆவணங்கள்:
- கூட்டு பட்டா நகல்
- நில வரைபடம்
- விற்பனை சான்றிதழ்
- சொத்து வரி ரசீது
- ஆதார் அட்டை
- மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
விண்ணப்பித்த பிறகு, சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் நேரில் நிலத்தை ஆய்வு செய்வர். சட்ட ரீதியான சிக்கல்கள் ஏதும் இல்லாவிட்டால், சுமார் 30 முதல் 60 நாட்களுக்குள் தனி பட்டா வழங்கப்படும். மேலும், விண்ணப்பத்தின் நிலையை இணையத்தில் தொடர்ந்து கண்காணிக்கலாம்.
குறிப்பு: சில நேரங்களில் 45 நாட்களுக்குள் தேவையான செயல்முறைகளை நிறைவு செய்ய வேண்டியிருக்கும்.
ஆஃப்லைன் மூலம் தனி பட்டா பெறுவது எப்படி?
வட்டாட்சியர் அலுவலகத்தில் (Taluk Office) “பட்டா பிரிப்பு” விண்ணப்பத்தை நிரப்பி, உட்பிரிவு கட்டணத்துடன் மனு அளிக்க வேண்டும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
- கூட்டு பட்டா
- நில வரைபடம்
- ஆதார் அட்டை
- சொத்து வரி ரசீது
அதன்பின் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து, புதிய சர்வே எண்ணை வழங்குவார்கள். அதன் பின்னர் தனி பட்டா வழங்கப்படும்.
மற்ற உரிமையாளர்கள் ஒப்புதல் அளிக்காவிட்டால்?
நிலத்தின் மற்ற உரிமையாளர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்தால், உரிமை பிரச்சினையை தீர்க்க நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.
பட்டா பிரிப்பு செய்யும் போது எல்லை மற்றும் அளவீட்டு சிக்கல்கள் எழ வாய்ப்பு இருப்பதால், விண்ணப்பிக்கும் முன் நில உரிமை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துவிடுவது நல்லது.
கூட்டு பட்டா பல நேரங்களில் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே தங்களது உரிமையை தெளிவாக பதிவு செய்து வைத்திருக்க விரும்பும் நில உரிமையாளர்கள், சட்டப்படி உட்பிரிவு செய்து தனி பட்டா பெறுவது சிறந்த நடைமுறையாகும். நில ஆவணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது, எதிர்கால சொத்து பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்.
இனி பட்டா வரலாற்றை எளிதில் தெரிந்து கொள்ளலாம்… அடுத்த வாரம் தொடங்கும் புதிய நடைமுறை!


