குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற மகேஷ் பாபுவை ஒருங்கிணைப்பு அதிகாரியாக (nodel officer) நியமித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்ற வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை அமல்படுத்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 699 வழக்குகள், பிடிவாரண்ட் நிலையில் நிலுவையில் உள்ளது என உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கூறியுள்ளாா்.
பல ஆண்டுகளாக பிடி வாரண்டை அமல்படுத்தாமல் இருப்பது நீதிபரிபாலன முறையை பலவீனப்படுத்திவிடும் எனவும் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்களை தலைமறைவு குற்றவாளி என அறிவித்து, வழக்கை நடத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடைமுறை குளறுபடிகளால் மக்களுக்கு நீதி மறுக்கப்படவோ, தாமதப்படவோ கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் கூறியுள்ளாா்.



