சென்னையில் இருந்து 182 பயணிகளுடன், இன்று மதியம் அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் தரை இறங்க முடியாமல், அவசரமாக சென்னைக்கு மீண்டும் திரும்பியது.சென்னையில் இருந்து இன்று பகல் 1:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு, 182 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் இன்று மாலை 3:45 மணிக்கு, அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும்.
ஆனால், இதற்கு இடையே அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற, ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, திடீரென அகமதாபாத் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனால் அகமதாபாத் விமான நிலையம், குறிப்பாக ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டு விட்டதாகவும், தகவல் கிடைத்தது.
இதை அடுத்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தை நெருங்கிக் கொண்டிருந்த, சென்னை- அகமதாபாத் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறை மூலமாக, விமானிக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்த விமானம் அகமதாபாத்திற்கு செல்லாமல் மீண்டும் நடு வானிலிருந்து திரும்பி, சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்த விமானம் சென்னையில் தரை இறங்க இருக்கிறது.
இதை அடுத்து சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் மற்ற விமானங்களும், தாமதமாக புறப்பட்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அகமதாபாத் விமான நிலையம் மீண்டும் சீரடைந்த பின்பு, சென்னை- அகமதாபாத் இடையே, விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.