அடையாறு ஆற்றில் நண்டுபிடிக்க சென்றபோது தண்ணீரில் சிக்கித் தவித்த குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிகேசவன் (48) – செல்வி (43) தம்பதியினர், குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக சென்னை அடையாறு பகுதியில் தங்கி சித்தாள் வேலை செய்து வந்துள்ளனர். வேலையில்லாத நேரங்களில் அடையாறு கூவம் ஆற்றங்கரையில் நண்டு மற்றும் மீன்பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


இந்த நிலையில், நேற்று மதியம் ஆதிகேசவன், அவரது மனைவி செல்வி ஆகியோர் நண்டுபிடிப்பதற்காக அடையாறு கூவம் ஆற்றில் மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அடையாறு ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் அங்கிருந்து வர முடியாமல் தத்தளித்துள்ளனர். இதனிடையே, வெகு நேரமாகியும் பெற்றோர் வீட்டிற்கு திரும்பாததால், அவர்களது மகன் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, இருவரும் அடையாறு ஆற்றில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பெற்றோரை மீட்க சென்ற அவரது மகனும் அங்கு சிக்கிக்கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவான்மியூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் மெரினா மீட்புப்படை குழுவினர் படகு மூலமாக ஆற்றில் சிக்கித்தவித்த ஆதிகேசவன், அவரது மனைவி செல்வி மற்றும் அவர்களது மக ஆகிய 3 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மேலும், பருவமழை தொடங்கி உள்ளதால் இனி ஆற்றுக்கு நண்டு பிடிக்கச்செல்ல வேண்டாம் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினர்.


