கோலிவுட் எனும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் திரைப்பயணம், இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. முகம், உடல் எடை, தோற்றம் என அனைத்திற்கும் கேலி, கிண்டல் செய்யப்பட்ட ஒரு இளைஞன், இன்று ஒட்டுமொத்த இந்திய திரையுலமும் கொண்டாடும் தளபதியாக உயர்ந்து நிற்கிறார்.
சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களாக, விஜய் மக்கள் இயக்கம் எனும் பேரில் பொதுமக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வந்தார். பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி கல்விக்கு உதவி புரிந்தார். மேலும், சென்னை வெள்ளத்தின்போது, தனது ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு உதவி செய்ய கோரினார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
அண்மையில் தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ளனர். கட்சி தொடங்கியது முதலே அடுத்தடுத்து அரசியல் போர்க்களத்திற்கு தேவையான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை, 100 மாவட்டங்களாகப் பிரிந்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றி கழகம் முடிவு செய்துள்ளது. புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் குறித்த தகவல்கள் 10 நாட்களுக்கு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாம்.