பிரபல நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா, பாரதிராஜாவின் மகனாக பிறந்ததுதான் மனோஜின் மரணத்திற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று (மார்ச் 25) திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நீலாங்கரையில் பாரதிராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மனோஜின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மனோஜின் குடும்பத்தினருக்கு தங்களின் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தம்பி ராமையா, மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாரதிராஜாவின் மகனாக பிறந்ததுதான் மனோஜின் இறப்பிற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெரிய மனுசனுக்கு மகனாக பிறந்துட்டாலே, இப்போ என்னப்பா பண்ற, அப்பாவை மாதிரி வரணும், அவருடைய பெயரை காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற பதற்றத்தை இந்த சமூகம் உண்டாக்குகிறது. ஒரு சராசரி மனிதனாக வீட்டிற்கு சென்று யார் யாரிடமும் பேச முடியாமல், கதவை அடைத்துக் கொண்டு மன அழுத்தத்தில் இருப்பதன் விளைவுதான் 48 வயதில் மரணத்திற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். முரளி சாரும், மனோஜும் படத்தில் நடித்த போது மனோஜை பற்றி முரளி சார் நிறைய விஷயங்கள் சொல்வார்.
மனோஜ் தம்பிக்கு நிறைய கனவுகள், திறமைகள் இருக்கிறது. ஆனால் அதை எப்படி வெளியில் கொண்டு வர வேண்டும் என தெரியவில்லை என்று சொல்வார். முரளி சார் 46 வயதில் இறந்துவிட்டார். இப்போது தம்பி மனோஜும் 48 வயதில் இறந்துவிட்டார். நிச்சயமாக அனைவரும் பாரதிராஜா சாரின் துயரத்தில் பங்கேற்றுக் கொள்வார்கள். அந்தப் பிதாமகனுக்கு இவ்வளவு பெரிய துயரத்தை தாங்கக்கூடிய சக்தியை கடவுள் தான் கொடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.