கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மன்சூர் அலிகானுக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதியப்பட்டது. அதன் பின் திரிஷாவிடம் அறிக்கையின் மூலம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாகவும் திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இருந்த போதிலும் மன்சூர் அலிகான், தான் திரிஷா குறித்து பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயரை கெடுத்ததற்கு குஷ்பூ, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோரின் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்தார். மூவருமே தலா ஒரு கோடி ரூபாய் வீதம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இது தொடர்பாக தனி நீதிபதி, மன்சூர் அலிகான் விளம்பர நோக்கத்திற்காகவே வழக்கு தொடர்ந்து உள்ளார் என மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த அபராத தொகையை திரும்ப செலுத்த மன்சூர் அலிகான் கால அவகாசம் கேட்ட நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை மீறி மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த மேல் முறையீடு மனு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி அபராத தொகையை செலுத்துவதாக கால அவகாசம் கேட்ட பின், எப்படி மேல்முறையீடு செய்தீர்கள்? அபராத தொகையை செலுத்த முடியுமா? முடியாதா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் நீதிமன்றம், மன்சூர் அலிகானின் கோரிக்கையை நிராகரித்து, இது தொடர்பான வழக்கு விசாரணை, வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.