திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து மடங்கு லாபம் எனக் கூறி வழக்கறிஞரிடம் ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த நபர் கைது.
திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கனிமொழி (வயது31) இவரது செல்போன் வாட்ஸ்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் ஆன்லைனில் வர்த்தகம் செய்தால் ஐந்து மடங்கு லாபம் கிடைக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
இதனை உண்மை என நம்பிய கனிமொழி விளம்பரம் வந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். எதிர் திசையில் பேசிய மர்ம நபர் கவர்ச்சியான வார்த்தைகளை பேசி கனிமொழியை, நம்ப வைத்துள்ளார். பணத்தை முதலீடு செய்வது தொடர்பான விவரங்கள் அடுத்தடுத்து கனிமொழியின் whatsappக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யும்படி கூறி சில வங்கி கணக்கு எண்களும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை எடுத்து கனிமொழி அந்த சென்னை நபர் கூறும் போதெல்லாம் வங்கி கணக்குகளுக்கு அடுத்தடுத்து பணங்களை அனுப்பினார். ஓரிரு மாதங்களில் மொத்தம் ரூ 15 லட்சத்து பணத்தை அந்த வங்கி கணக்குகளுக்கு கனிமொழி அனுப்பி வைத்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ததற்கு உரிய லாபத் தொகை எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
மேலும் அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல நாட்களாக அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னரே கனிமொழி தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை உணர்ந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் கனிமொழி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறி 15 லட்சம் மோசடி செய்த சென்னை நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெய்வம் தலைமையில் போலீசார் விசாரணை தொடங்கினர். விசாரணையில் கனிமொழி அனுப்பிய பணம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஜீவா என்பவரது வங்கி கணக்கிற்கு சென்றது என்பது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் சென்னைக்குச் சென்று பூந்தமல்லியில் பதுங்கி இருந்த ஜீவாவை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .