சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய பிக் பாஸ் நடிகை சௌந்தர்யா ரூ. 17 லட்சத்தை பணத்தை இழந்துள்ளார்..
நாடு முழுவதும் சைபர் கிரைம் மோசடியில் பெடக்ஸ் கொரியர் மோசடி மற்றும் ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களிடமிருந்து சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் கொள்ளை அடித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நாடு முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதுபோன்ற மோசடிகளால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகை சௌந்தர்யா சைபர் கிரைம் மோசடியில் ரூ. 17 லட்சம் இழந்ததாக தெரிவித்த விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தான் 8 வருடமாக சம்பாதித்ததை ஒரு போன் காலில் நடந்த சைபர் கிரைம் மோசடி மூலமாக இழந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை சனம் செட்டி ரூ. 17 லட்சத்தை நடிகை சௌந்தர்யா இழக்கும் வகையில் என்ன செய்தார்? எதை மறைத்தார்? என்று சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டு விமர்சித்திருப்பதும் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக சௌந்தர்யாவின் குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலமாக சைபர் க்ரைம் மோசடியில் பணத்தை இழந்தது தொடர்பான FIR காபியை பகிர்ந்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொண்டதில் சின்னத்திரை நடிகை சௌந்தர்யா கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி சூளைமேட்டில் வீட்டில் இருக்கும் போது இரவு செல்போன் அழைப்பு ஒன்று வந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். பெடெக்ஸ் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் மும்பையில் இருந்து ஈரானுக்கு தங்கள் பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில் பாஸ்போர்ட்டுகள் மற்றும் எம்.டி.எம்.ஏ போதைப் பொருள் உள்ளிட்டவை இருப்பதாகவும், அது தற்போது ரிட்டன் வந்துள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிப்பதாக ராகேஷ் சர்மா என்பவர் பேசியுள்ளார்.
இதையடுத்து மும்பை சிபிஐ அதிகாரி என பேசிய நபர் நடிகை சௌந்தர்யாவை ஸ்கைப் கால் மூலமாக டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக போதைப்பொருள் பார்சல் அனுப்பாமல் இருந்தீர்களா எனவும், நீங்கள் சம்பாதித்து வங்கியில் வைத்திருக்கிற பணம் இதுபோன்று போதைப் பொருள் காரணமாக சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் சேர்த்து வைத்துள்ளீர்களா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை என்ற பெயரில் மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை சௌந்தர்யா தொலைபேசியில் சிபிஐ அதிகாரி என பேசியவரிடம் விளக்கம் கேட்டபோது, சிபிஐ வழக்கு தொடர்பான ஆவணத்தையும் ஆர்பிஐ ஆவணத்தையும் நடிகை சௌந்தர்யாவிற்கு whatsapp-ல் அனுப்பி உள்ளனர். இதைக் கண்டு உண்மை என நம்பி 12 பணப்பரிவர்த்தனை மூலமாக 17 லட்சத்து 57 ஆயிரத்து 888 ரூபாய் பணத்தை சௌந்தர்யா அனுப்பியுள்ளார். குறிப்பாக சட்டவிரோத பணம் இல்லை என்றால் தாங்கள் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறும் ஆய்வு செய்து விட்டு பணத்தை திரும்பி அனுப்புவதாக கூறி, சிபிஐ அதிகாரியாக பேசிய அந்த நபர் கூறியதால் பணத்தை நடிகை சௌந்தர்யா அனுப்பியுள்ளார்.
சற்று நேரத்திற்கு பிறகு பணம் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சௌந்தர்யா உடனடியாக தேசிய சைபர் கிரைம் போர்டலுக்கு புகார் அளித்துள்ளார். மேலும், சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பிரிவில் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் பிரிவு போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் சௌந்தர்யா அனுப்பிய பணம் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மும்பை , அஸ்ஸாம், மைசூர், போபால் என பல்வேறு இடங்களில் உள்ள ஒன்பது வங்கிக் கணக்குகளில் சென்றடைந்ததாக தெரியவந்துள்ளது. வழக்கமாக ஒரே ஒரு வங்கிக் கணக்கில் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்ய சொல்லும் சைபர் கிரைம் மோசடி கும்பல் இந்த விவகாரத்தில் 9 வங்கி கணக்கை கொடுத்து பணப்பரிவர்த்தனை செய்யச்சொன்னது மோசடியில் புதுவிதமாக இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒரு மாத காலமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது பிக் பாஸில் பல கோடி பேர் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் தான் பணம் இழந்தது குறித்து சௌந்தர்யா தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் விழிப்படைவதற்கு ஒரு விதத்தில் உதவி உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இதுபோன்று பணத்தை இழந்தாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் தைரியமாக சைபர் கிரைம் மோசடி குறித்து தெரிவித்த காரணத்தினால் பல மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள் என்பதால் நடிகை சௌந்தர்யாவிற்கு சென்னை காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது.