வீட்டின் வெளிபுறமாக கதவை பூட்டி, ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை அரும்பாக்கம், ஜெகநாத நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் தெற்கு ரயில்வே அதிகாரி. இவரது மனைவி விமலா இவர்களது மகன் ஹித்தேஷ். கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி இரவு நந்தகுமார் மனைவியுடன் ஒரு படுக்கையறையிலும் மகன் ஹித்தேஷ் மற்றொரு படுக்கையறையிலும் தூங்கினர். அதிகாலையில் கண்விழித்து எழுந்த விமலா, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் வெளியே வந்து பார்த்தபோது மற்றொரு அறையில் கைப்பையில் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ80 ஆயிரம் ரொக்கம், வெள்ளி கைச்செயின் மற்றும் கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசில் புகார் அளிக்கப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் நந்தகுமார் வீடு புகுந்து படுக்கையறை கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு நூதன முறையில் கைவரிசை காட்டி நகை பணத்தை சுருட்டி தப்பியது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (37) என்பது தெரிந்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த அவரை தாம்பரம் பகுதியில் சுற்றி திரிந்தபோது தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முத்துக்கிருஷ்ணன் வீடு புகுந்தவுடன் படுக்கையறை கதவை வெளிபக்கம் பூட்டிவிட்டு கைவரிசை காட்டி வருவதை வழக்கமாக கொண்டவர். இவர் மீது ஏற்கனவே திருமுல்லைவாயில், பெரவள்ளூர், திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் செயலி மூலம் வேலைக்கு சேர்ந்த பெண்ணால் 12 சவரன் நகையை பறிகொடுத்த முதியவர்!!


