வேலையில்லாத விரக்தி- குடிபோதையில் தந்தையை கொன்ற மகன்
வேலூரில் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ்(63), சமையல் தொழிலாளி. இவரது மகன் சரத்குமார்(27). திருமாணகவில்லை. இவர் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் வேலையில் இருந்து விலகி விட்ட நிலையில், வேலையில்லாத விரக்தியில் குடிபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் அடிக்கடி குடித்து விட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவதாக தெரிகிறது. இதேபோல் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவும் சரத்குமார்குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை தேவராஜூம் மதுபோதையில் இருந்ததாகதெரிகிறது. தேவராஜ், சரத்குமாரிடம் `ஏன் எப்போது பார்த்தாலும் தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்?’ எனக்கேட்டுள்ளார். அப்போது தந்தை, மகன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தந்தை தேவராஜ், அங்கிருந்த கல்லால் மகன் சரத்குமாரை தாக்கியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த சரத்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார்.
தேவராஜ் அலரல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த தேவராஜை மீட்டு உடனடியாக வேலூர் அரசினர் பென்ட்லெண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தேவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.