மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வெறிநாய் கடியால் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அலங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் வாடிவாசல் பகுதிகளில் சுற்றித்திரிந்த வெளிநாய் திடீரென பொதுமக்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. நாய் கடித்ததில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றனர். ஆனால் அங்கு ரேபிஸ் தடுப்பூசி இல்லை என செவிலியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி மற்றும் அதிர்ச்சி அடைந்தனர்.

வெறிநாய் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால், தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் ரேபிஸ் தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
