சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலியானாா்கள். அதில் ஐதராபாத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு பேருந்தில் மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பத்ருக்கும், மதீனாவிற்கும் இடையிலான முஃபர்ஹத் அருகே அவர்கள் பயணித்த பேருந்து அதிகாலை 1.30 மணியளவில் டீசல் டேங்கர் லாரி மீது மோதியது. விபத்து நடந்த நேரத்தில் அனைத்து யாத்ரீகர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்களில் பெரும்பாலோர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சவுதி நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகள் மேற்கொண்டு காயமடைந்தவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகம் சிறப்பு கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க ஹஜ் குழுவும், இந்திய தூதரகமும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பேருந்தும் டேங்கர் லாரியும் மோதியதில் மொத்தம் 42 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களில் 20 பேர் பெண்கள் 11 பேர் குழந்தைகள் ஆவர். இந்த விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



