புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் மோடியின் கனவு- அமித்ஷா
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடியிடம் அளிக்கப்படும். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்கு சான்றாக சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த ஆதினஙகள் டெல்லியில் பிரதமரிடம் செங்கோலை ஒப்படைப்பர். புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் கனவு. பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைக்கு எடுத்துக்காட்டு புதிய நாடாளுமன்ற கட்டடம்.

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட 60 ஆயிரம் பேரை பிரதமர் கௌரவிப்பார். தமிழ்நாட்டில் உள்ள ஆதினங்கள் வழங்கிய செங்கோல்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திரமோடியே திறந்துவைப்பார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டிய 60,000 தொழிலாளர்களை பிரதமர் பாராட்டி கவுரவிப்பார்” என்றார்.
முன்னதாக திமுக, விசிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), சிவசேனா (யுபிடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜனதா தளம் (ஐக்கிய) உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.