எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு
டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், எடப்பாடி பழனிசாமி, அவரது உறவினர்கள், நண்பர்கள், பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களுக்கு ரூ.4,800 கோடி ரூபாய் வரை டெண்டர் ஒதுக்கீடு செய்யபட்டு முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என உத்தரவிட்டு, ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது.
ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அக்டோபர் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் வழங்கி வழக்கை ஒத்திவைக்க லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்தியது. அப்போது தங்கள் தரப்பில் ஆவணம் தாக்கல் செய்ய உள்ளதால் நோட்டீஸ் வேண்டாம் என ஈபிஎஸ் வழக்கறிஞர் அரியமாசுந்தரம் வாதாடினார்.