திருப்பதியில் ரூ.827 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக 7 மாதங்களில் ரூ.827 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனாவிற்கு பிறகு பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப செலுத்தும் உண்டியல் காணிக்கை மூலம் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. அவ்வாறு கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை ஏழு மாதத்தில் ரூ827 கோடி பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் ஒரே நாளில் ரூ.7.68 கோடி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் இதுவே ஒரே நாளில் வந்த அதிகப்பட்ச உண்டியல் காணிக்கையாகும்.
கடந்த ஜனவரி மாதம் 123 கோடியே 7 லட்சத்து 61 ஆயிரத்து 900 ரூபாயும், பிப்ரவரி மாதம் 114 கோடியே 29 லட்சத்து 54 ஆயிரத்து 700 ரூபாயும், மார்ச் மாதம் 120 கோடியே 29 லட்சத்து 44 ஆயிரத்து 300 ரூபாயும், ஏப்ரல் மாதம் 114 கோடியே 12 லட்சத்து 43 ஆயிரத்து 800 ரூபாயும், மே மாதம் 109 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 300 ரூபாயும், ஜுன் மாதம் 116 கோடியே 14 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயும், ஜூலையில் 129 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை முதல் இரவு வரை 68,601 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 23,396 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.5.21 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இன்று காலை 7 மணிக்கு பிறகு எந்த வித டிக்கெட்டுகளும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனுமதிக்கப்பட்டு 10 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.