டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு மே 03ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் தேர்தல் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் பரப்புரை செய்வதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.