கர்நாடகா தேர்தல்- 21% வாக்குகள் பதிவு
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது.
கர்நாடகாவில் ஆண்கள் 2,430 பேர், பெண்கள் 185 பேர் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க. 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகளை மே 13- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் காலை 9 மணி வரை 8.26 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி, 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 13.28 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக யாத்கிர் மாவட்டத்தில் 5.33 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் வருணா தொகுதி வேட்பாளர் சித்தராமையா வாக்களித்தார்.
இதேபோல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. பெங்களூரு, ஜெயநகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா.