கர்நாடக முதல்வர் யார்?- இன்று இரவு அறிவிப்பு
கர்நாடக முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று இரவு அறிவிப்பு வெளியாகும் முன்னாள் அமைச்சர் ஜெயச்சந்திரா பேட்டியளித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், நேற்று (மே 14) இரவு 07.00 மணிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 135 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.பி.ஜெயச்சந்திரா, “இன்று இரவுக்குள் கட்சித் தலைமை அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிக்கும். நேற்று இரவு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் மேல் மட்ட பொறுப்பாளர்கள் கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர். இன்று கட்சி தலைமைக்கு மேல்மட்ட பொறுப்பாளர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு இன்று இரவுக்குள் அடுத்த முதல்வர் குறித்து கட்சி மேலிடம் அறிவிக்கும். முதல்வர் தேர்வில் கட்சியில் எந்த வேறுபாடும் கிடையாது. இன்று சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகிய இருவரும் டெல்லி செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.