ஓடும் ரயிலில் பயங்கரம் – 3 பேர் பலி
கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு நபர் தனது சக பயணியை தீ வைத்து எரித்ததில் 8 பேர் தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் நடந்துள்ளது. இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ரயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 2 வயது குழந்தை உட்பட 3 பேரின் உடல்கள் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்குப் பிறகு மக்கள் ரயிலில் இருந்து குதித்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் அவசர சங்கிலியை இழுத்ததையடுத்து, ரயில் வேகம் குறைந்தபோது, தீவைத்து எரித்த நபர் தப்பி சென்றார். இச்சம்பவத்தில் தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர், இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது இரு பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.