கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலியாக இருந்த 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதியும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்துகொண்டு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் கர்நாடக மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை உறுப்பினராக மல்லிகார்ஜுன கார்கே தனது புதிய பதவிக்காலத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.
