ராகுல்காந்தி அவதூறு வழக்கு- எதிர்தரப்புக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்
ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கும், குஜராத் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் “மோடி” சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக ராகுல்காந்தி மீது பர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். பர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 100 நாட்களுக்கு மேலாக தொகுதிப் பணிகளை ராகுல்காந்தியால் செய்யமுடியவில்லை என ராகுல் தரப்பு வாதத்தை முன்வைத்தது. இதனை கேட்ட உச்சநீதிமன்றம், ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடுத்த குஜராத் எம்.எல்.ஏ பர்னேஷ்மோடி மற்றும் குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 நாட்களுக்குள் பதில் அளிக்க எதிர்மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் எதிர்தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டியுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்க்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்ததால் ராகுல்காந்தி மழைகால கூட்டத்தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.