
கர்நாடகாவில் மாநில முதலமைச்சர் பதவியைப் பிடிப்பதில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவும் நிலையில், அவர்களின் ஆதரவாளர்கள் மாறி மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கட்சி!
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக, டி.கே.சிவக்குமாரை மாநில முதலமைச்சராக அறிவிக்கக் கோரி, சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதேவேளையில் மீண்டும் கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்கும் சித்தராமையாவுக்கு வாழ்த்துகள் என அவரின் ஆதரவாளர்கள் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் இல்லத்தின் முன்பாக, சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
இதனிடையே, இன்று (மே 14) மாலை 05.30 மணிக்கு பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் பதவியைப் பிடிக்க சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவுவதால் இரு தரப்பினரையும் அழைத்து பேசி தனது முடிவை அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்துப் பேசினார்.