என்.கே.மூர்த்தி
‘யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்கவேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்காதவர்கள் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது‘ என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டார். இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மையில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் என்ன நடக்கிறது ? அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடப்பது அதிகார மோதலா? குடும்பப் பிரச்சனையா? என்ன நடக்கிறது என்று விவாதித்து வருகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி 1989ம் ஆண்டு தொடங்கியபோது டாக்டர் ராமதாஸ் 5 சத்தியங்களை செய்தார். அதில் மிகவும் முக்கியமானது “என் வாரிசுகள் யாரும் கட்சியில் எந்த பதவிக்கும் வரமாட்டார்கள்” என்று சத்தியம் செய்தார். அவர் அந்த சத்தியத்தை பலமுறை மீறி விட்டார் என்பது நாடறிந்த செய்தி.
நாட்டு மக்களுக்கு டாக்டர் ராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி 2004ல் திமுக கூட்டணியில் இடம்பெற்று தன் மகன் அன்புமணிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்தார். அப்போது மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேச மாநிலங்களில் இரண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாமக தலைவர் அன்புமணி பிஜேபியுடன் நடந்துக் கொள்ளும் நடவடிக்கை பொருத்து அந்த வழக்கு விசாரணைக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம்.
பாமக தொடங்கிய காலத்தில் இருந்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து சுமார் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு குறைவில்லாமல் வெற்றி பெற்று வந்தனர். நாடாளுமன்றத்திலும் 3,4 தொகுதிகளை பெற்று மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்று வந்தனர். ஒரு கட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தான் தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கின்ற சக்தி, நாங்கள் யாருடன் கூட்டணி வைக்கிறோமோ அவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும் என்று ஆணவத்துடன் பேசத் தொடங்கினார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்தனர். அதன் பின்னர் 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற கோஷத்தை முன் வைத்து தனித்து நின்று 5.5 சதவீதம் ஓட்டுகளை பெற்றனர். 2014ல் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தபோது பாமகவிற்கு தொடங்கிய சரிவை தற்போது வரை மீட்க முடியவில்லை. தேர்தல் ஆணையத்தில் மாநில கட்சி என்கிற அங்கிகாரத்தையும் இழந்தது.
பாமக தொடங்கிய காலத்தில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலைப்பாடுகளை எடுத்து வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு தற்போது பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்த மாநில கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்கொண்டு இருக்கிறது. அதனால் முதலில் பாஜக விடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும். அடுத்தது அங்கிகாரம் பெற்ற மாநில கட்சியாக தரம் உயர்வதற்கு வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் தயாராக இல்லை. கடந்த 2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியமான தேர்தல். அந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் குறைந்தது 10 எம்பி தொகுதிகளை கைப்பற்றி இருக்க முடியும். ஆனால் அந்த தேர்தலில் பாஜகவினால் எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து அதிமுக துணிந்து பாஜக கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்தது.
தமிழகத்தில் தனித்து விடப்பட்ட, மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சியாக பாஜக தற்போது இருந்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இடம்பெற்று குறைந்தது 10 எம்எல்ஏ சீட்டுகளையாவது பிடித்து மாநில கட்சி என்கிற அங்கீகாரம் பெற முயற்சி செய்து வருகிறார். ஆனால் அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்று விரும்புகிறார். இதுதான் அப்பா, மகனுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலுக்கான காரணம்.
அன்புமணிக்கு பாஜக கொடுக்கும் நெருக்கடி
மத்தியில் உள்ள பாஜக அரசு, கூட்டணியில் பாமக தொடர வேண்டும் என்று விரும்புகிறது. அதற்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பாமகவை உடைத்துக் கொண்டு வந்து பாஜகவில் அன்புமணி இணைந்து விட வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது. ஒரு வேளை அன்புமணி, அப்பா பேச்சை தட்டாமல் கேட்கின்ற நல்ல பிள்ளையாக மாறினால் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தூசுத் தட்டப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுதான் கடந்த இரண்டு நாட்களாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடந்துவரும் பஞ்சாயத்து என்று பாமக நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் அன்புமணி அப்பாவை சந்தித்துப் பின்னர் கண் கலங்கியபடி செய்தியாளர்களை சந்தித்தற்கு காரணம்.