தமிழ்நாட்டில் டாஸ்மாக் நடத்தும் மதுபான கடைகள் முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தை பாஜகவினர் மேற்கொண்டனர். இதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான கொள்முதல், விற்பனையில் முறைகேடு நடப்பதாக கூறி மதுவிற்பனை கடைகள் முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாட்டின் பல டாஸ்மாக் மதுபான கடைகள் முன்பாக பாஜகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டினர்.
டாஸ்மாக் கடைகள் முன்பு முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை ஒட்டியதாக பாஜகவினர் ஆங்காங்கே கைதும் செய்யப்பட்டனர். பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் அதே டாஸ்மாக் கடைகளில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாட்டையால் அடித்துக் கொள்ளும் படத்துடன், இந்த கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற வாசகத்துடன் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். பொது கழிப்பிடங்களிலும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் படங்களையும் திமுகவினர் ஒட்டினர்.
டாஸ்மாக் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டியதற்காக பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா தமது எக்ஸ் பக்கத்தில், டாஸ்மாக் அரசு நடத்தும் சாராயக்கடை. அப்படியானால் முதல்வர் தானே owner. பின் முதல்வர் படத்தை அங்கு ஒட்டுவது எப்படி தவறாகும். ஓனர் படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியினரை காவல்துறையினர் தடுப்பது, கைது செய்வது அராஜகத்தின் உச்சம். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.