மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் . அது ஏன் தெரியுமா என்ற கேள்வி கேட்டு அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த எட்டு நாட்களாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் 350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் பரவுகின்றன .

முதல்நாள் சோதனையின் போது அரசு அதிகாரிகளை அமைச்சரின் ஆதரவாளர்கள் உள்ளே செல்ல விடாமல் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதனால் அதிகாரிகள் அவர்களிடம் இருந்து தப்பித்து சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்றனர். அதிகாரிகள் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் இந்தியா முழுவதும் இதையே பலரும் செய்தால் வருமான வரித்து சோதனை எப்படி நடத்த முடியும்? எந்த அதிகாரிகள் துணிந்து செல்வார்கள்? என்று சவுக்கு சங்கர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் இலாகா மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன .
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது, கரூர் ரெய்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘’அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. தங்கள் கடமையை செய்ய வரும் வருமான வரித்துறை அதிகாரிகள் அது குறித்த தகவலை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று சொல்கிறது தமிழக காவல்துறை.
இதன் மூலம் காவல்துறை என்பது ஏவல் துறையாக மாறி இருக்கிறது என்பதை காட்டுகிறது. சோதனைக்கு வந்த அரசு அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தாக்கியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது. உண்மையில் செந்தில் பாலாஜியின் மீது வழக்கு பதிவு செய்து அவரைத்தான் கைது செய்ய வேண்டும். ஏன் தெரியுமா ? அப்போதுதான் அரசு அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்’’என்கிறார் அழுத்தமாக.