Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27  மீனவர்கள் சென்னை திரும்பினர்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27  மீனவர்கள் சென்னை திரும்பினர்!

-

- Advertisement -

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்திலிருந்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மாலை 13 மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். நள்ளிரவில் இலங்கை கடலோர காவல்படை ரோந்து கப்பல் வந்து, தங்கச்சிமடம் மீனவர்களின் விசைப்படகை மடக்கிப்பிடித்து, எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி 13 மீனவர்களையும் கைதுசெய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர். தொடர்ந்து மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இலங்கை சிறையில் அடைத்தனர்.

இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26ஆம் தேதி 14 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் கடலுக்குச்சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல், ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 14 மீனவர்களையும் கைதுசெய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 14 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடம் மீனவர்கள் 27 பேரும், விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். உடனடியாக தூதரக அதிகாரிகள், மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 27 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்களை, தூதரக அதிகாரிகள் வழங்கினர். அதோடு மீனவர்களுக்கு விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தனர்.

இதை அடுத்து நேற்று இரவு, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 27 மீனவர்களும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை வந்தடைந்த மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், மீனவர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

MUST READ