சட்டப்பேரவை கதவுகளை மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டப்பேரவை கதவுகளை மூடி ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், ஆளுநர் தொடர்பான பேரவை விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார். சட்டப்பேர்வையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் அந்த தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய பாஜக அனுமதி கோரிய நிலையில், சபாநாயகர் உத்தரவின்பேரில் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன.

ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினர் பெயரையும், குறிப்பிட்டு எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டமன்றத்தில் பகுதி வாரியான எண்ணிக்கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடதக்கது.
ஆளுநர் தொடர்பான தீர்மானத்துக்கு பாஜக உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயம் பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் பேரவைக்கு வரவில்லை. அவையில் இருந்த 146 உறுப்பினர்களில் தீர்மானத்துக்கு 144 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்மானத்தை ஆதரிப்போர் எண்ணிக்கை நான்கில் 3 பங்குக்கும் மேல் உளதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.