பேருந்து- ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து; 8 மாணவர்கள் படுகாயம்
புதுச்சேரியில் பேருந்து-ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கி வரும் குளுனி தனியார் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். நகர மற்றும் கிராம பகுதியில் இருந்து இப்பள்ளிக்கு மாணவர்கள் வருகின்றனர். அதேபோல் மூலகுளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்தனர். அப்போது புஸ்ஸி வீதியில் ஆட்டோ வந்தபோது, எதிர்பாராத விதமாக புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற தனியார் பேருந்து ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ்(22) மற்றும் 8 சிறுமிகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு அலறினர்.


உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் மற்றும் 8 சிறுமியரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததனர். மருத்துவமனையில் சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தகவல் அறிந்த ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி விரைந்து வந்து மருத்துவமனையில் குழந்தைகளை பார்த்தார். இதில் மூலக்குளத்தை நிக்கிஷா (10), அவந்தீகா (10) ஆகியோர் தலையில் படுகாயம் அடைந்து மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் இரு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய துணைநிலை ஆளுநர், தேவைப்படும் குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை அளிக்க சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


