கள்ளுக்கடை திறப்பதில் பாஜக உறுதி- அண்ணாமலை
தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் கடந்த 29 ஆம் தேதி தொடங்கினார். பரமக்குடியில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, “தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் சீனிக்கு பதிலாக பனங்கருப்பட்டி வழங்கப்படும். மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம் கூட திமுக வர முடியாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது.
குடுப அரசியல் என்பது மக்களின் வளர்ச்சியை அடியோடு நாசப்படுத்திவிடும். கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் என்று சொன்னர்கள். தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். தற்போது திமுக ஆட்சி அமைத்து 28 மாதங்கள் ஆகின்றன. ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் ஆட்சியாளராக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” எனக் கேள்வி எழுப்பினார்.