தமிழகத்தில் பாஜக எந்த ஒரு குட்டிக்கரணம் அடித்தாலும் அந்த பருப்பு வடை ஊசி தான் போகும் என்று மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆா்.பி.ராஜா பேட்டி அளித்துள்ளார்.
நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் வாக்காளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வாக்கை ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது குடும்பத்துடன் வந்து வானத்தில் உள்ள சூரியனை பார்த்து கை எடுத்து வணங்கி வாக்களித்தார்.
பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது திராவிட நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சியில் ஒட்டுமொத்த தமிழகமே செழித்துக் கொண்டிருக்கும் வேலையில் ஒட்டுமொத்த இந்தியர்களும் தமிழ்நாட்டைப் போன்ற ஒரு வளர்ச்சி வேண்டும் என்று விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து துறைகளும் முதலாவது மாநிலமாக திகழ்கிறது.
அனைத்து தரப்பு மக்களும் சகோதரத்துவ உணர்வோடு அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். மேலும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற ஒரு அற்புதமான, ஆக்கபூர்வமான, ஒவ்வொரு இல்லத்திற்கும் வளர்ச்சியை கொடுக்கும் அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது.
கோயம்புத்தூரில் திமுகவுக்கு அதிமுகவுக்கு தான் பிரதான போட்டி, பாஜக குறுக்கே ஓடிக்கொண்டு நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொண்டு உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவை நூதன முறையில் கொள்ளையடித்தவர்கள் பாஜகவினர் குறுக்கு வழியில் வாக்கு வங்கியை பெறுவதற்காக குட்டிக்கரணம் அடித்து வருகிறார்கள். தமிழகத்தில் பாஜக எந்த ஒரு குட்டிக்கரணம் அடித்தாலும் அந்த பருப்பு வடை ஊசி தான் போகும்.
தேர்தல் ஆணையத்தின் மீது எல்லோருக்கும் சந்தேகம் இருக்கிறது. தேர்தல் ஆணையர்களாக அவர்கள் யாரை நியமித்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் தமிழக முதல்வர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். பாஜக குறுக்கு வழியில் வெற்றி பெறமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் என்று டி.ஆர்.பி.ராஜா கூறினார்.